Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூடங்குளம் அருகே வாலிபர் குத்திக்கொலை - உடல் சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் வீச்சு

ஆகஸ்டு 01, 2021 11:40

கூடங்குளம்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் நம்பியாற்றில் நேற்று காலையில் ரத்தம் தோய்ந்த சாக்கு மூட்டை கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள், அதனை திறந்து பார்த்தனர். அப்போது அதில், சுமார் 20 வயதுடைய வாலிபர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்கு கிடந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இறந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, கொலையுண்ட வாலிபர் பணகுடியைச் சேர்ந்த சுப்பையா மகன் அஜித்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அஜித்குமாரை மர்ம நபர்கள் வேறு எங்கேனும் குத்திக்கொலை செய்து விட்டு, உடலை மறைப்பதற்காக சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்